பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை: 3 விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணைகளின் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக ஒரு ஏவுகணை சீறிப் பாய்ந்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரின் மீது விழுந்தது. அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த விவகாரத்தில் தான் இந்திய விமானப்படை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்னல் தலைமையில் நடந்த விசாரணையில், மூன்று அதிகாரிகள் ஏவுகணையை தவறுதலாக செலுத்தியது தெரியவந்தது. இந்த மூன்று அதிகாரிகளும் இந்த சம்பவத்திற்கு முழுமையாக பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தவறுதலாக செலுத்தப்பட்ட இந்த ஏவுகணையால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் அரசு இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவை கேட்டுக்கொண்ட பாகிஸ்தான், “இதுபோன்ற அலட்சியத்தால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று எச்சரிக்கவும் செய்திருந்தது.

அதற்கு பதிலாக மத்திய அரசு சார்பில், “பராமரிப்பு நடைமுறைகளின் போது தவறாக ஏவுகணை விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லையில் விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. எனினும் ஏவுகணை பாய்ந்தது வருத்தத்துக்கு உரியது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.