திகாரில் இருந்து சுகேஷ், மனைவி லீனா இன்று சிறை மாற்றம்

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரும், அவரது மனைவியும்  டெல்லி திகார் சிறையில் இருந்து மண்டோலி சிறைக்கு இன்று மாற்றப்பட உள்ளனர். அதிமுக.வின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை செய்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவரும், இவருக்கு உடந்தையாக இருந்த மனைவியான நடிகை லீனா மரியா பாலும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறை ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சுகேஷ், சிறையிலிருந்தபடியே பலரை போனில் மிரட்டி ரூ.200 கோடி பறிந்துள்ளார்.

இந்நிலையில், திகார் சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தன்னையும், மனைவி லீனாவையும் வேறு சிறைக்கு மாற்ற சுகேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், டெல்லி மண்டோலி சிறைக்கு மாற்றும்படி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சுகேஷ், லீனாவை இன்று மண்டோலி சிறைக்கு மாற்ற திகார் சிறை நிர்வாகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. மண்டோலியில் உள்ள சிறையில் இவர்கள் அடைக்கப்பட உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.