இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு வெள்ளை குதிரை பரிசளித்த மங்கோலிய அதிபர்

உலான்பாட்டர்,

இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஜப்பான் மற்றும் மங்கோலியா நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, கடந்த திங்கட்கிழமை மங்கோலியா சென்றடைந்த அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின் அந்நாட்டு அதிபர் உக்நாகின் குருல்சுக் உடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் பற்றி மறுஆய்வு செய்யப்பட்டது. சிங்குக்கு வெள்ளை குதிரை ஒன்றை மங்கோலிய அதிபர் பரிசாக அளித்து உள்ளார்.

வெள்ளை குதிரையுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், மங்கோலியாவில் நமது சிறப்பு நண்பர்களிடம் இருந்து ஒரு சிறப்பு பரிசு.

இந்த வசீகரிக்கும் அழகிற்கு தேஜஸ் என நான் பெயர் சூட்டியுள்ளேன். அதிபர் குரெல்சுக்கிற்கு நன்றி. மங்கோலியாவுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பாதுகாப்பு மந்திரி என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

7 ஆண்டுகளுக்கு முன் மங்கோலியா சென்ற பிரதமர் மோடிக்கு இதேபோன்றதொரு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு மங்கோலியாவுக்கு பிரதமர் மோடி சென்றபோது, அப்போது, மங்கோலிய பிரதமராக இருந்த சிமெட் சாய்கான்பிலெக், பிரவுன் நிறத்திலான பந்தய குதிரை ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.