அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் நேற்று இலங்கை வந்தடைந்தார்

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் நேற்று (11) இலங்கை வந்தடைந்தார்.

ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பிற்கு அமைய அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தினுடைய இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று இலங்கையை வந்தடைந்த மார்ட்டின் சுன்கொங் அவர்களை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் ராமநாதன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது மார்ட்டின் அவர்கள் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாட இருப்பதாக  பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். அத்துடன் மார்ட்டின் சுன்கொங் அவர்கள், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அதனையடுத்து, அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற சபை முதல்வர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.