திருநெல்வேலியில் மர்ம காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி!!

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். சுகாதார துறையினரும் கிராமம், கிராமமாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

பாளையங்கோட்டை மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் டெய்லர் ஆதிநாராயணன் (40). இவரது மூத்த மகள் தங்கவேணி (12). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். தங்கவேணி, கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டாள். இதனால் பள்ளிக்கும் செல்லவில்லை.

இதையடுத்து பெற்றோர், தங்கவேணியை மூலைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் காய்ச்சல் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி தங்கவேணி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறையினர், மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.