தமிழகம் முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல்

சென்னை/சேலம்/ஈரோடு/தேனி: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று சீல் வைக்கப்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்பினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை கடந்த மாதம் சோதனை நடத்தின. இதுதொடர்பாக தமிழகத்தில் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேர் உட்பட நாடு முழுவதும் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்படி, பிஎஃப்ஐ மற்றும் அதன் 8 துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து அவற்றுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, பிஎஃப்ஐ மற்றும் 8 துணை அமைப்புகளுக்கு தமிழக அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுதொடர்பான உத்தரவை அரசாணை மூலம் தமிழக அரசு வெளியிட்டது.

பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், சென்னை புரசைவாக்கம் முக்காத்தாள் தெருவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்துக்கு புரசைவாக்கம் மாநகராட்சி மண்டல அதிகாரி, கட்டிடத்தின் உரிமையாளர் முன்னிலையில் போலீஸார் நேற்று சீல் வைத்து, நோட்டீஸ் ஒட்டினர். இதன் காரணமாக, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோன்று, சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் மற்றும் டவுன் வட்டாட்சியர் செம்மலை தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று சேலம் செவ்வாய்பேட்டை அப்சரா இறக்கத்தில் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பிஎஃப்ஐ அலுவலகத்துக்கு வந்து, அங்கிருந்த பொருட்கள் குறித்து விவரங்களை சேகரித்தனர். பின்னர் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல, ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ், வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஈரோடு மணிக்கூண்டு அருகே ஜின்னா வீதியில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகத்தை நேற்று பூட்டி சீல் வைத்தனர். மேலும், ‘சீல்’ வைத்ததற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தேனியில் சீல்

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே முத்துத்தேவன்பட்டியில் ‘அறிவகம்’ எனும் மதக்கல்வி நிலையம் (மதரஸா) செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த செப்.22-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

இதில் மடிக்கணினி, மொபைல்போன் மற்றும் மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், தேனி வட்டாட்சியர் சரவணபாபு தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர், தேனி முத்துத் தேவன்பட்டி மதரஸாவுக்கு நேற்று ‘சீல்’ வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.