ரூ.1,977 கோடியாக உயர்ந்த திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் தரவில்லை – மத்திய அரசால் தாமதமாகிறதா மதுரை எய்ம்ஸ்?

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தில் ரூ.1,977 கோடியாக உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காததாலேயே கட்டுமானப் பணிக்கு இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு 2015 பிப்.28-ம் தேதி அறிவித்தது. பல்வேறு இழுபறிக்குபிறகு, மருத்துவமனை அமைக்க 2018-ல் மதுரை தோப்பூர் தேர்வானது. 2019 ஜன.27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. மாணவர் சேர்க்கை மட்டும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கி தற்போது முதலாண்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிந்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார்.

ஆனால், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடம் பொட்டல் காடாகவே உள்ளது. சுற்றுச்சுவர் எழுப்பியதை தவிர, வேறு எந்த பணியும் நடக்கவில்லை. திமுக அரசும் இதற்கு பெரிய அளவில் அழுத்தம் தருவதாக தெரியவில்லை.

இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது:

5-வது கட்டமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பட்டியலில் மதுரை, பிலாஸ்பூர் இடம்பெற்றிருந்தன. இதில், இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் மட்டும் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநிலங்களவைக்கு தேர்வான மாநிலம் இமாச்சல பிரதேசம். பிலாஸ்பூர் தொகுதியில் இருந்து 2 முறை அவர் எம்எல்ஏவாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால், பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு தனி கவனம் செலுத்தி தற்போது திறந்து வைத்துள்ளது.

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நேரடியாக 100 சதவீதம் தனது நிதியை வழங்கியுள்ளது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன்பெறுகிறது. ஜைக்கா நிறுவனம்கூட கடன் வழங்க தயாராகவே உள்ளது. ஆனால், மத்திய அரசின் அக்கறையின்மை, நிர்வாக ரீதியாக இத்திட்டத்தை தள்ளிப்போடுவது போன்ற காரணங்களால் கட்டுமானப் பணியே தொடங்கப்படாமல் உள்ளது.

தொடக்கத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,200 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு, கால தாமதத்தால் திட்ட மதிப்பீடு ரூ.1,977 கோடியாக உயர்த்தப்பட்டது. அதில் 90 சதவீதத்தை தருவதற்கான ஒப்பந்தத்தில் ஜைக்கா நிறுவனமும் கையெழுத்திட்டுவிட்டது. ஆனால், உயர்த்திய தொகைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை.

திட்ட மதிப்பீடு உயர்ந்ததால் மத்திய அரசு, தனது நிதியில் இருந்து கூடுதலாக ரூ.70 கோடி முதல்ரூ.80 கோடி தரவேண்டும். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் தந்தால் மட்டுமே அடுத்ததாக ஒப்பந்தப்புள்ளி கோர முடியும். மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.