சென்னை: கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல், பழங்கால சிலைகள் இருப்பதாக தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில், டிஎஸ்பி-க்கள் முத்துராஜா, மோகன் தலைமையிலான தனிப்படை போலீஸார், அந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.
இதில், அங்கிருந்த பழங்கால வீணாதாரர் மற்றும் ரிஷபதாரர் ஆகிய 2 வெண்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சோழர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, இரு சிலைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் துல்லியமான மதிப்பு குறித்துநிபுணர்களின் கருத்துகளைப் போலீஸார் கேட்டுள்ளனர். மேலும், இவை எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டவை, தொடர்புடையவர்கள் யார் எனவும் விசாரிக்கின்றனர்.