ஓபிஎஸ் மகன் தோட்டப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் விவசாய நிலங்களில் பெண் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை வனப்பகுதியில் தேனி தொகுதி எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கிய பெண் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தபோது சிறுத்தை வனத்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே அதே பகுதியில் மறுநாள் ஒரு ஆண் சிறுத்தை வேலியில் மாட்டி சிக்கி உயிரிழந்தது. இதுதொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இறந்த ஆண் சிறுத்தையை தேடி பெண் சிறுத்தை அந்தப் பகுதியில் அடிக்கடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பெண் சிறுத்தையின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள், தங்களின் நிலங்களுக்கு செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவுக்காவல் பணியில் இருப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டுமென தேனி மாவட்ட வன அலுவலர் சம்ருதா அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.