கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் செயினை பறிக்க முயற்சி – முகமூடி கொள்ளையனுக்கு தர்ம அடி

வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தெ பெண்ணிடமிருந்து செயின் பறிக்கவந்த முகமூடி திருடனை பொதுமக்களே பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள மனக்காவலபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வி. இவர் இன்று காலை ஏழு மணி அளவில் மெயின் ரோடு பக்கம் அமைந்துள்ள தனது வீட்டின் முன்பு வாசல் பெருக்கி கோலம் போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியே முகமூடி அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கத்தியை காட்டி பறிக்க முயன்றுள்ளார். நிலைமையை சுதாரித்துக் கொண்ட செல்வி சத்தம் போட்டு, ’ஐயோ திருடன்! திருடன்!’ எனக் கூச்சலிட்டுள்ளார்.
image
அப்போது முகமூடி அணிந்த திருடன் கையில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு செல்வியின் கழுத்தில் கிழித்துள்ளார். செல்வி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கையில் பிடித்துக் கொண்டு வீட்டினுள் செல்ல முயன்றுள்ளார். உடனே தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரும்பு பைப்பை எடுத்து செல்வியின் முதுகில் ஓங்கி தாக்கியுள்ளான் திருடன். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி முகமூடி அணிந்த திருடனை விரட்டியுள்ளனர்.
image
பொதுமக்கள் விரட்டுவதைக் கண்ட முகமூடி அணிந்த திருடன் வேகமாக ஓடி மன காவலபுரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் பதுங்கி இருந்துள்ளார். பதுங்கியிருந்த முகமூடி திருடனை பொதுமக்கள் சுற்றி வளைத்து, தர்ம அடி கொடுத்து திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளையனை பிடித்து தங்கள் பாணியில் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் அந்த நபர் விஜய அச்சம்பாடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சத்தியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. சத்தியமூர்த்தியை திசையன்விளை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.