சட்டசபை கிளைமாக்ஸ்; அருகருகே உட்காருவாங்களா எடப்பாடி – ஓபிஎஸ்?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை கூட இருக்கிறது. இதில் அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொள்ளமாட்டார்கள். ஆனால், சட்டப்பேரவையில் அப்படி இருக்க முடியாது. அதிமுக எம்எல்ஏகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கள் கட்சியினருடன் சேர்ந்து தான் அவர்கள் உட்கார வேண்டும். 

எதிர்கட்சி தலைவர் மற்றும் எதிர்கட்சி துணை தலைவர் ஆகியோருக்கு அருகருகே சீட் இருக்கும். அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர வேண்டிய சூழல் உள்ளது. அதேநேரத்தில் எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, ஆர்.பி உதயகுமாரை நியமித்திருப்பதாக அதிமுக கொறடா வேலுமணி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதம் மீது அப்பாவு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் அப்பாவுக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். இதுகுறித்து பேசிய சபாநாயகர் அப்பாவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இதனால், ஒருவேளை சபாநாயகர் அப்பாவு முடிவெடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகாமையில் இருக்கும் எதிர்கட்சி துணைதலைவர் நாற்காலியில் ஓ.பன்னீர்செல்வம் அமர வேண்டியிருக்கும். இது இருவருக்குமே சங்கடமான சூழல் என்பதால், என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.