பாக்., மாஜி பிரதமர் இம்ரான் கான் அரசு பதவி வகிக்க 5 ஆண்டுகள் தடை| Dinamalar

இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு பதவிகள் வகிப்பதில் இருந்து ஐந்து ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து, அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

பாகிஸ்தானில், பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் விலை உயர்ந்த பரிசுகளை, நாடு திரும்பியதும் அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

அந்தப் பரிசுகள், அரசு கருவூலத்தில் பாதுகாக்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட தலைவர்கள் அல்லது அதிகாரிகள் அந்த பரிசு பொருட்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள அனுமதி உண்டு. அந்த பரிசுப் பொருட்கள் தள்ளுபடி விலையில் அளிக்கப்படும்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், பாக்., பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்த பின், அவர் மீதான வழக்கு ஒன்றை, ஆளும் கூட்டணி அரசு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது. அதன் விபரம்:

இம்ரான் கான் பாக்., பிரதமராக இருந்தபோது பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்தார். அப்போது அவருக்கு பல விலை உயர்ந்த பரிசுகள் அளிக்கப்பட்டன. அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்தவர், பின் அதை தள்ளுபடி விலையில் வாங்கி, மிக அதிக விலைக்கு வெளியே விற்று லாபம் சம்பாதித்துள்ளார்.அவரது வருமான வரி கணக்கு தாக்கலில் இந்த லாபத்தை குறிப்பிடவில்லை. பொறுப்பான பதவியில் இருந்தவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கண்டனத்துக்கு உரியது.
எனவே, அரசு பதவி வகிப்பதில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை, தலைமை தேர்தல் கமிஷனர் சிக்கந்தர் சுல்தான் ராஜா தலைமையிலான ஐந்து நபர்கள் அடங்கிய அமர்வு விசாரித்து, தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில், ஐந்து ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிப்பதில் இருந்து இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்து அமர்வு உத்தரவிட்டது. இதற்கு இம்ரானின் பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஆசாத் உமர் தெரிவித்தார்.
பாக்.,கில் எட்டு பார்லி., தொகுதிக்கும், மூன்று சட்டசபை தொகுதிக்கும் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், இம்ரான் கான் கட்சி முறையே ஆறு மற்றும் இரண்டு தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.