வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் பெரியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இந்த 2 மாதங்களில் புயல் வந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும். புயல் வந்தாலும் அதனை சந்திக்க அனைத்து மாவட்ட நிர்வாகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடற்கரையோர மாவட்ட கலெக்டர்கள் விழிப்புடன் இருப்பதுடன், அவசர தேவைகளையும் தெரிவிக்குமாறு கூறியுள்ளோம். மீட்புப்படைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பேரிடரை எதிர்கொள்ள 65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயாராக உள்ளனர். ஒரு ஊரில் மரம் விழுந்தாலோ, மின்கம்பம் சாய்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்வு நடந்தாலோ, உடனடியாக எனக்கோ அல்லது அந்த பகுதி தாசில்தாருக்கோ களப்பணியாளர்கள் தகவல் கொடுப்பர். இவ்வாறு தெரிவித்தார்.