திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியில்லை எனவும், 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேலும் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
வருடாந்திர மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று (நவ.,16) திறக்கப்பட்டது. இதனையடுத்து கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பக்தர்கள் குவியத் துவங்கியுள்ளனர்.
சபரிமலையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அறிவுறுத்தல்கள் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாக கூறி கேரள அரசு அதனை வாபஸ் பெற்றுள்ளது. சபரிமலையில் 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 2018ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement