
சிதம்பரம் அருகே, நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலைடில் மகள் காதலனுடன் சென்றதால் வேதனையடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(65). இவர், தனது மனைவி சுமதியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் இறந்து கிடந்த இருவரது உடலையும் மீட்ட புதுச்சத்திரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தம்பதியின் மகள் புஷ்பரோகினி(19) சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். இவருக்கு வரும் 20-ம் தேதி பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(25) என்பவருடன் திருமண செய்ய நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (17-ம் தேதி) காலை கல்லூரிக்கு சென்ற புஷ்பரோகினி, தான் ஏற்கனவே காதலித்து வந்த வேலங்கிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்(24) என்பவருடன் சென்று விட்டார். இதனால் அவரின் தாய், தந்தை இருவரும் சேகர் என்பவரின் வயலில் நெல்லுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து இறந்தது தெரியவந்தது.