ரோடக்: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோற்ற வேட்பாளருக்கு கிராம மக்கள் ரூ.2 கோடி பணமும், பெரிய காரையும் பரிசாக கொடுத்துள்ளனர். அரியானா மாநிலம், ரோடக் மாவட்டத்தில் உள்ள சித்தி கிராமம். இங்கு கடந்த 12ம் தேதி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில், இதே கிராமத்தை சேர்ந்த தரம்பால் தலால் அகா கலாவும், நவீன் தலாவும் போட்டியிட்டனர். இதில், தரம்பால் 66 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த கிராமம் மிகவும் பதற்றமிக்கது. தரம்பால் தோற்றதால் கிராமத்தில் மோதல் வந்து விடக் கூடாது என கிராம மக்கள் நினைத்தனர். அவரை சமாதானப்படுத்தும் வகையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு ரூ.2 கோடியே 11 லட்சம் ரொக்கமும், பெரிய காரையும் பரிசாக வழங்கியுள்ளனர். இதனால், தரம்பால் மிகவும் நெகிழ்ந்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ‘கடந்த 2000ம் ஆண்டில் இந்த பஞ்சாயத்து தலைவராக நான் இருந்தபோது, பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டேன். தேர்தலில் தோற்றதால் மிகவும் மனம் உடைந்தேன். ஆனால், என் கிராம மக்கள் எனக்கு ஆறுதல் கூறி, ரூ.2.11 கோடி பணமும், காரும் பரிசளித்து, தங்களின் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்,’ என தெரிவித்தார்.
