மும்பை: தீயாகப் பரவும் தட்டம்மை, 1,250க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு: 9 பேர் உயிரிழப்பு!

மும்பையில் தட்டம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில் உள்ள கோவண்டியில் மட்டும் இந்த நோய்க்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் 8 பேரும், புறநகரான பிவாண்டியில் ஒருவரும் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து வந்தனர். அதன் பிறகுதான் மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, குழந்தைகள் உயிரிழப்புக்கு தட்டம்மை நோய்தான் காரணம் என்பதை உறுதிசெய்தது. தற்போது மும்பையில் மட்டும் தட்டம்மை நோய் அறிகுறிகளுடன் 1,256 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 164 பேருக்கு தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து உயர்மட்டக்குழு மும்பை வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றிருக்கிறது. இந்நோய் அதிகமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத்தான் தாக்குவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி இது குறித்து கூறுகையில், ’குடிசைப்பகுதியில் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி மிகவும் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தட்டம்மை, நிமோனியா போன்ற நோய்கள் குழந்தைகளை எளிதில் தாக்கும்.

தட்டம்மை எளிதில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடியது என்றார். இந்நோய் தொற்று ஏற்பட்டால் ஆரம்பத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும். அதன் பிறகே உடம்பில் சொறி உருவாகும்’ என்று தெரிவித்துள்ளார். சொறி உருவாகும் முன்பே இந்த நோய் ஏற்பட்ட ஒருவர் மற்றொருவருக்கு அதனை பரப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.