புனே: பிரேக் பிடிக்காத டேங்கர் லாரி மோதி 48 வாகனங்கள் அடுத்தடுத்து சேதம்… 30 பேர் காயம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நேற்று இரவு 9 மணிக்கு மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவாலே மேம்பாலத்தில் புனே நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென பிரேக் பிடிக்காமல் எதிரில் சென்ற வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக மோதிக்கொண்டது. டேங்கரில் இருந்த ஆயில் சாலையில் கசிந்து சாலை முழுக்க ஆயிலாக மாறியது. டேங்கர் மோதிக்கொண்டபோது பின்னால் இருந்து வேகமாக வந்த வாகனங்கள் திடீரென பிரேக் போட்டதால் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 40க்கும் அதிகமான வாகனங்கள் சேதம் அடைந்தன. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினரும், புனே போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 30 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு சேதம் அடைந்த வாகனங்களை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்த பல மணி நேரம் எடுத்துக்கொண்டது. தீயணைப்புத்துறையினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 48 வாகனங்கள் சேதம் அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாலை வரை மீட்புப்பணிகள் நடந்தது. அதன் பிறகுதான் போக்குவரத்து சீரடைந்தது. தற்போது விபத்து நடந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான் மும்பை-புனே நெடுஞ்சாலையில் மாருதி கார் ஒன்று லாரியின் பின்புறமாக சென்று மோதிக்கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் 4 பேர் காயமும் அடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.