சென்னையில் திடீர் மழை… கூடவே வந்த எச்சரிக்கை… வங்கக்கடலில் புதிய புயல்!

தலைநகர் சென்னையில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மழை இல்லை. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காரைக்காலில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது நகரும் திசை கிழக்கு – தென்கிழக்கு ஆகும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது, திடீர் காற்றுடன் கூடிய மழை பொழியும். இதனால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

கிட்டதட்ட மோசமான வானிலை நிலவுவதை உறுதிபடுத்துகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, பொன்னேரி, மயிலாப்பூர், திருவொற்றியூர், வேளச்சேரி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றூ காலை லேசான மழை பெய்துள்ளது. இதனால் ஏற்கனவே குளிர்ச்சியாக காணப்படும் வானிலை மேலும் குளிர்ச்சி அடைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் இதமான வானிலையை அனுபவித்தனர்.

ஆனால் பெரிய அளவில் மழை இல்லாததால் விடுமுறைக்கு வாய்ப்பில்லை. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். சென்னையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதேசமயம் பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, இலங்கை, ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

இடையில் 65 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நாளை மறுநாள் வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கேற்ப பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இன்று மாலை மற்றும் நாளை காலை மழை நிலவரத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.