ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

நாமக்கல்: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆளுநருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த சட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.92.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சட்டக் கல்லூரி அடிக்கல் நாட்டும் விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இதைத்தொடர்ந்து இந்த விழாவில் அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது: “இந்திய அரசியலமைப்பு தினத்தில் நாமக்கல் அரசு சட்ட கல்லூரியை தொடங்குவது சிறப்பானது. மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். சைபர் குற்றம், இணையவழி குற்றம், பொருளாதார குற்றம், வணிக குற்றம் நடைபெறும் நிலையில் அதற்கேற்ப சட்டக் கல்லூரியில் பாடங்களை அமைத்து அக்குற்றங்களை தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இன்று யார் வேண்டுமானலும் சட்டம் படிக்கலாம் என்கிற அளவிற்கு சட்டக் கல்லூரிகள் உள்ளது” என்று அவர் பேசினார்.

இதன்பின்னர் ‘செய்தியாளர்களிடம்’ பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக மத்திய சட்ட அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆளுநருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.