சபரிமலையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்.. பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார்!

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக இரண்டாம் கட்டமாக 2,600 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களை அரவணைத்துச் செல்லும் பணிக்காக, இரண்டாம் கட்டமாக 2,600 போலீஸார் பொறுப்பேற்ற நிகழ்வு சபரிமலை சன்னிதானத்தில் நடந்தது.
சபரிமலையில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு முழு தளர்வுகளுடன் கூடிய மணடல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிவதால், பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
image
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களை அரவணைத்து செல்லும் பணிக்காக மட்டும் 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 2,100 போலீசார் கடந்த 17ம் தேதி சபரிமலையில் பொறுப்பேற்றனர். 10 நாட்கள் பணி முடிந்ததும் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 2,600 போலீஸார் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும் உதவி சிறப்பு போலீஸ் அதிகாரி டி. கே. விஷ்ணு பிரதாப், ஒன்பது டி..எஸ்.பி.க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 95 எஸ்.ஐ.கள்/ஏ.எஸ்.ஐ.க்கள் மற்றும் 1290 போலீசார், 1150 சிவில் போலீசார் என இரண்டாம் கட்டமாக சபரிமலையில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.
image
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக பொறுப்பேற்ற போலீஸாருக்கு சபரிமலை சன்னிதான ஆடிட்டோரியத்தில் பணி விளக்க கூட்டம் நடந்தது. ஐயப்ப பக்தர்களின் தரிசனத்தை சுமூகமாக்க அனைத்து அரசு துறை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஒத்துழைக்க வேண்டும் என சபரிமலை சிறப்பு போலீஸ் அதிகாரி பி.கிருஷ்ணகுமார் கேட்டுக்கொண்டார். மற்றும் தரிசனத்திற்காக ஒன்றரை லட்சம் பக்தர்கள் வரும் நாட்களும் இருக்கலாம் என்றும், போலீசார் முழு அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
image

போலீஸாரோடு என்.டி.ஆர்.எஃப், ஆர்.ஏ.எப்., பிற மாநில போலீசார் மற்றும் பல்வேறு பாதுகாப்பு படை வீரர்களும் சபரிமலை பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
தவிர பக்தர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், சுகாதாரம் போக்குவரத்து , தங்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் கேரள அரச சார்பில் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.