மராட்டிய வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி; கர்நாடக பஸ்கள் மீது கருப்பு மை பூச்சு

புனே,

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சமீபத்தில் கர்நாடக – மராட்டிய எல்லை பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோல மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் பெலகாவி சென்று, மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச உள்ளதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்குள் நுழையவும் தடைவித்தது. இதனால் கடந்த சில நாட்களாக இருமாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

இந்தநிலையில் பெலகாவியில் மராட்டிய மாநில வாகனங்கள் மீது கர்நாடக அமைப்பை சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்கினர். மேலும் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து புனேயில் உத்தவ் தாக்கரே சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சுவார்கேட் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கர்நாடக மாநில அரசு பஸ்களில் கருப்பு மை பூசினர். மேலும் அவர்கள் கர்நாடகாவில் மராட்டிய வாகனங்கள் தாக்கப்பட்டால், அங்கு இருந்து ஒரு ரெயில் கூட மராட்டியத்துக்குள் நுழைய முடியாது என எச்சரிக்கைவிடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களை அங்கு இருந்து கலைத்தனர். இந்த சம்பவத்தால் புனேயில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல கோலாப்பூர், இச்சல்கரஞ்சி உள்ளிட்ட இடங்களிலும் உத்தவ் தாக்கரே சிவசேனாவினர் கர்நாடகத்தில் மராட்டிய வாகனங்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.