புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிப்பதற்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு தேவைப்படும் புறம்போக்கு நிலத்துக்குப் பதில், பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்துகொள்ள அனுமதித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தைக் கொடுத்து, அதற்குப் பதிலுக்கு பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதித்து கடந்த மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து புதுச்சேரியைச் சேர்ந்த சூர்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தமிழக அரசின் இந்த அரசாணை, அரசு புறம்போக்கு நிலங்கள், சிறிய நீர்நிலைகளை ஆக்கிரமிக்க வழிவகை செய்கிறது. நீர்நிலைகள் பொது பயன்பாட்டுக்குரியது. எனவே அவற்றை தனியாருக்கு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் உள்ளது.

அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிப்பது, நீர்நிலைகளுக்கு மட்டுமல்லாமல், நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய், ஓடைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும். எனவே இந்த அரசாணையின் அடிப்படையில் நில பரிமாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், “அரசு நிலம் பரிமாற்றம் செய்வது தொடர்பான அரசாணையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.