இலங்கைக்கு உதவுவதில் இந்தியா இன கண்ணோட்டம் பார்க்கவில்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
வெளியுறவு கொள்கை தொடர்பாக, மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதன் மீது எம்.பி.க்கள் கேட்ட விளக்கங்களுக்கும் அவர் பதில் அளித்தார்.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்ததால் பொருளாதார உதவிகள் அளித்தோம் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த இலங்கைக்கும் உதவினோம் என்று குறிப்பிட்ட அவர், அதில் தமிழ் இனமும் அடங்கும் என்றார். இலங்கைக்கு உதவும் பிரச்சினையில் இன கண்ணோட்டத்தை பின்பற்றவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்
நமது அண்டை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும்போது, நாம் உதவாமல் இருந்தால், நமது பொறுப்பை தட்டிக்கழித்த மாதிரி ஆகிவிடும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது உண்மைதான் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது நமது நீண்டகால நிலைப்பாடு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
முந்தைய அரசுகளும் இதையே பின்பற்றின என்று கூறிய அமைச்சர், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாக்க இதுதான் ஆக்கப்பூர்வமான வழிமுறை என்று கூறியுள்ளார். பாலஸ்தீன பிரச்சினையில் இரு நாடுகள் தீர்வை இந்தியா ஆதரிப்பதாக கூறிய அமைச்சர்,இரு நாடுகளும் அருகருகே அமைதியாக வாழ வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கத்தாரில் 100 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளையும், நைஜீரியாவில் சிறையில் உள்ள 16 இந்திய மாலுமிகளையும் மீட்க இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
newstm.in