முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்துறை அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சிநெறி வகுப்பு (08) முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டு நிதி அனுசரணையில் UNDP நிறுவனம் மற்றும் OfeRR (Ceylon) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் 200 மணித்தியாலங்களை உள்ளடக்கியதாக இந்த கற்கை நெறி நடைபெறவுள்ளது.
இக் கற்கைநெறி வாரத்தில் இரு நாட்கள் நடைபெறும் . 80 வீதமான வரவு கட்டாயமானதென வலியுறுத்தப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தேசிய மொழிகள் பிரிவின் உத்தியோகத்தர் அ.தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.க.விமலநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), அரச கரும மொழிகள் திணைக்களத்தின் இரண்டாம் மொழி சிங்கள வளவாளர் சுனில் ஆரியரட்ன, UNDP நிறுவனத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மீள்குடியேற்ற உத்தியோகத்தர் வைதேகி நரேந்திரன், OfeRR (Ceylon) நிறுவனத்தின் உத்தியோகத்தர் மற்றும் கற்கைநெறியினை பயிலும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.