தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வலுப்பெற்றுள்ளது.
இதற்கு மான்டாஸ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமும் காணப்படுகிறது.
இந்த புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பதினைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை.
இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டப்படகுகள் துறை முகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மாலை முதல் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதையடுத்து இன்று காலையும் பலத்த சூறாவளி காற்று வீசியது.
இந்தக் கடல் கொந்தளிப்பால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி மோதியதில் பத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமானது. அத்துடன் கடல் அலையால் இழுத்து வரப்பட்டு பின்னர் கரை தட்டியது.
இதை பார்த்த மீனவர்கள் படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் கடல் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி சேதமடைந்தன.