புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் பிணமாகக் கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ராகுல்(26) கனடாவில் எம்பிஏ படித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆலங்குடி நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு அங்கு வீட்டிலேயே ராகுல் தூங்கியுள்ளார். இதையடுத்து நேற்று காலை அவரது பாட்டி மங்களம் எழுந்து பார்த்தபோது ராகுலை காணவில்லை என்பதால் அவரை தேடி உள்ளார்.
அப்பொழுது வீட்டில் உள்ள கிணற்றில் பார்த்தபோது ராகுல் பிணமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்த மங்களம் அதிர்ச்சடைந்து கதறி அழுத நிலையில், இவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் பிணமாக கிடந்த ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராகுல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.