மேற்கு டெல்லியின் உத்தம் நகரில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 17 வயது மாணவி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் துவரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சிறுமி முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர்.
இதில், கண்கள் மற்றும் முகம் வெந்து வலியால் அலறித் துடிதுடித்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் சிறுமி மீது ஆசிட் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிட் வீசிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.