தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் முருகேசன். இவர் லோயர்கேம்ப் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இன்று காலை குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பேருந்தை ஓட்டிச்சென்றார். கனமழை பெய்ததால் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் கோபமடைந்த பயணிகள் ஓட்டுனர் முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பயணிகளை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு பேருந்துடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ளவர்கள் அவரிடம் விசாரித்தபோது, ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து முருகேசன் தெரிவித்ததாவது, “கடந்த சில ஆண்டுகளாக அரசு பேருந்துகள் ஓட்டை, உடைசலாகவே இருக்கிறது. இதற்காக தேனி மற்றும் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து 22 மணிநேரம் பணிபுரிவதற்கும் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் கடும் மனஉளைச்சலில் உள்ளேன். இதுமட்டுமல்லாமல், பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பயணிகளுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதனால், மாவட்ட ஆட்சியரை சந்தித்து அரசு பேருந்தின் நிலைமையை எடுத்துக் கூறுவதற்கு இங்கு வந்துள்ளேன்” என்றுத் தெரிவித்தார். அதன் பின்னர் அவரை திண்டுக்கல் வட்டார போக்குவரத்து கழகத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.