
எங்கள் குடும்பத்தை பிரியாமல் ஒன்றாக வைத்திருக்கும் பாட்டி – நெகிழும் கவுதம் கார்த்திக்
தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்கத் தொடங்கிய கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் கடந்த நவம்பர் 28ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமண நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், மிகவும் இனிமையான அன்பான நபரான எனது பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது அன்பான பாட்டி எங்கள் முழு குடும்பத்தில் மதிப்பு மிக்க நபராக இருக்கிறார். எங்கள் குடும்பத்தை பிரியாமல் ஒன்றாக வைத்திருக்கும் அவருக்கு நன்றி. அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நேர்மையாகவும் அன்பாகவும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதற்கும் அவருக்கு என்னுடைய நன்றி. எங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் எனது பாட்டி மகிழ்ச்சியாக இருக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது கவுதம் கார்த்திக், பத்து தல, 16 ஆகஸ்ட் 1947 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.