22 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் ஜெகதீசன் அசத்தல்… அதிரடியையும் தாண்டி ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி டிரா

தமிழக வீரர்களின் அதிரடியையும் தாண்டி ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஹைதராபாத்-தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஹைதராபாத் – தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை போட்டி நடைபெற்றது.

13 ம் தேதி துவங்கிய இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 395 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய தமிழ்நாடு அணி துவக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 4 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் சாய் சுதர்சன் 179, ஜெகதீசன் 116, பாபா அபராஜித் 115 ரன்கள் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 258 ரன்கள் எடுத்து ஆலவுட் ஆனது.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியபோது இறுதி நாள் ஆட்டமான இன்று குறைந்த நேரமே மிஞ்சி இருந்தது.

மொத்தம் 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து சாய் சுதர்சன் அவுட்டானார்.

டி20 போட்டியில் விளையாடுவது போல் அதிரடி காட்டிய ஜெகதீசன் 22 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

7 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்தபோதும் வெற்றி இலக்கை எட்ட முடியாததால் ஆட்டம் டிரா-வில் முடிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.