5ம் வகுப்பு மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியை: சிறுமிக்கு தீவிர சிகிக்சை

புதுடெல்லி: டெல்லியில் 5ம் வகுப்பு மாணவியை  ஆசிரியை ஒருவர் கத்திரிக்கோலால் தாக்கி   மாடியில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய டெல்லி, மாடல் பஸ்தியில் மாநகராட்சி தொடக்க பள்ளி உள்ளது. இதில் 5ம் வகுப்பில் ஒரு மாணவி படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி முதல் மாடியில் உள்ள தனது வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது வகுப்பறைக்கு வந்த ஆசிரியை கீதா தேஸ்வால், திடீரென  அந்த மாணவியை கத்திரிக்கோலால் சரமாரியாக தாக்கினார்.
இதில் கோபம் தீராத அவர், முதல் மாடி வகுப்பறை ஜன்னல் வழியாக சிறுமியை தூக்கி வீசி உள்ளார்.   இதில் சிறுமி படுகாயமடைந்தார்.  

வலியால் அலறி துடித்த  சிறுமியை மாணவர்கள், ஆசிரியர்கள்  மீட்டு  இந்துராவ் மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர்  நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை  அதிகாரி தெரிவித்தார். மாணவர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை கீதா தேஸ்வால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி காவல் துணை ஆணையர் ஸ்வேதா சவுகான் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.