பல்வேறு நாடுகளிலும் மீண்டும் கொரோனா பரவுவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது மீண்டும் வேகம்காட்டி வருகிறது. சீனாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, கொரோனா பரவல் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதே போல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி பொதுமக்கள் அவதியுறுகின்றனர். எனவே, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை மரபணு ஆய்வகங்களுக்கு அனுப்பும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் மூலம் கொரோனாவின வகைகளை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.
இதனை அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in