சோனியா காந்தியின் பேச்சுக்கு துணை ஜனாதிபதி கண்டனம்

புதுடெல்லி: நீதித்துறை குறித்த சோனியா காந்தியின் பேச்சுக்கு  துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார். துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நேற்று மாநிலங்களவையில் பேசும்போது, ‘‘நீதித்துறை சட்டபூர்வமற்றதாக்கப்படுகிறது என்ற சோனியா காந்தியின் பேச்சு துரதிர்ஷ்டவசமாகும். இது பொருத்தமற்றதாக உள்ளது. மேலும் ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றதன்மையை காட்டுகிறது. நீதித்துறையை  சட்டபூர்வமற்றதாக்கும் முயற்சி என்பது பற்றி நான் நினைத்து கூட பார்க்காத  கற்பனை ஆகும். உயர்  அரசியலமைப்பு சட்ட பதவிகளை தங்கள் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்றார்.

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது,‘‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நாடாளுமன்ற இறையாண்மைக்கு சமரசம் விடுக்கும் செயல்’’ என்று விமர்சித்திருந்தார் . நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் முறைக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது பற்றி நேற்று முன்தினம் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘‘நீதித்துறையை சட்டபூர்வமற்றதாக்க மாற்றுவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் நடந்து வருகிறது. இதையொட்டி தான் ஒன்றிய அமைச்சர்கள், உயர் அரசியலமைப்பு சட்ட பதவிகளில் உள்ளவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் நீதித்துறையை தாக்கி பேசி வருகின்றனர்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.