பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீட்டை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்குவதில், வழக்கம்போல குளறுபடிகளைச் செய்து வருகிறது திறனற்ற திமுக அரசு. பொங்கல் பரிசை பொதுமக்களுக்கு வழங்குவதில் அவர் கட்சிக்காரர்கள் கொடுக்கும் இடைஞ்சல்களைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.

கோவை மாவட்டம் பொன்னையா ராஜபுரம் பகுதியில், பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் மொத்தமும், திமுகவினருக்கே வழங்கியுள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டும் காணொலி வெளியாகி அதிர்ச்சியைத் தருகிறது. அது மட்டுமல்லாது, திருமுல்லைவாயல் பகுதியிலும், ஆளும் கட்சிக் கவுன்சிலர்களிடம் இருந்து டோக்கன்கள் பெற்றுக்கொள்ளுமாறு, பொதுமக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.

மேலும் பல்வேறு இடங்களில், பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்களே வருந்திப் புலம்பும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆளுங்கட்சித் தலையீடை நிறுத்தத் திறனில்லாத திமுக அரசு, ரேஷன் கடை ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறது என்றும் அரசு ஊழியர்கள் வருந்துகிறார்கள்.

உடனடியாக, பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடை நிறுத்தி, பொங்கல் தொகுப்பு டோக்கன்களை அரசு ஊழியர்கள் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், தனது கட்சிக்காரர்கள் செய்யும் தவறுகளுக்கு, அரசு ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் கண்துடைப்பு நாடகத்தை நிறுத்தி, உரியவர்களுக்குப் பொங்கல் தொகுப்பு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.