பானாஜி: விமானத்தில் பணிப்பெண்களிடம் வெளிநாட்டு பயணி அத்துமீறிய சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவாவில் உள்ள மோபாவில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 5ம் தேதி டெல்லியில் இருந்து கோ பர்ஸ்ட் என்ற விமானம் சென்றது. அதில் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி திடீரென விமான பணிப்பெண்களிடம் அத்துமீறினார்.
ஒரு பணிப்பெண்ணை பிடித்து தன்னுடன் கட்டாயப்படுத்தி அமர வைத்த அவர், இன்னொரு பணிப்பெண்ணிடம் ஆபாசமாக பேசினார். இதுபற்றி விமான ஒழுங்குமுறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மோபா விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த வெளிநாட்டு பயணி விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.