பாரிஸ் ரயில் நிலையத்தில் மர்ம நபர் கத்திக் குத்து: பலர் காயம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பிரபலமான கரே டூ நார்ட் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் கத்திக் குத்து நடத்தியதில் பலர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 6.40 மணிக்கு கரே டூ நார்ட் ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் பரபரப்பான ரயில் நிலையங்கள் கரே டூ நார்ட் ரயில் நிலையமும் ஒன்று. பாரிஸ், லண்டன் மற்றும் ஐரோப்பாவின் வடக்கை இணைப்பதில் இந்த ரயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் போலீஸார் தீவிர சோதனை நடத்தியது. அதன்பின்னர் தற்போது இந்த ரயில் நிலையத்தில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்குவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிரான்ஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் அங்கு எப்போதும் பாதுகாப்பும் கண்காணிப்பும் பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் உணவகங்கள், மதுபான விடுதிகள், கச்சேரி அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் என ஐ.எஸ் தீவிரவாதிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.