பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ ரயில் தூண் சரிந்ததால் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அகல்வதற்குள் மெட்ரோ ரயில் பணியிடத்தில் சாலை உள்வாங்கியதால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் காயமடைந்துள்ளார்.
பெங்களூரு ரோக் ப்ரிகேட் சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் இன்று (ஜன.12) பகல் 12.30 மணியளவில் திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில் சிக்கி இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் காயமடைந்தார். நல்வாய்ப்பாக அவருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. நடந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வாயிலாக பள்ளத்தின் தாக்கம் தெரியவந்துள்ளது.
தாய், மகன் பலியான சோகம்: பெங்களூருவில் இரண்டாம் கட்ட (Phase 2B) மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நகவாரா என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மெட்ரோ ரயில் பில்லர் சரிந்து விழுந்ததில், சாலையில் சென்றுகொண்டிருந்த 35 வயது தேஜஸ்வினி என்ற பெண்ணும், அவரது 2 வயது மகனும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தேஜஸ்வினியின் கணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பொறியாளர்கள் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ரோக் ப்ரிகேட் சாலையில் விபத்து நடந்துள்ளது.
Karnataka | A portion of a road caved in at Ashok Nagar in Bengaluru amid ongoing work related to metro construction underground. pic.twitter.com/2cyLJUIvwS
— ANI (@ANI) January 12, 2023