`ரூ.100 கோடி வேண்டும்' – தாவூத் பெயரைச் சொல்லி நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்; போலீஸ் தீவிர விசாரணை

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் தாவூத் இப்ராஹிம், தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. அதோடு, தாவூத் இப்ராஹிம் தங்களது நாட்டிலேயே இல்லை என்று பாகிஸ்தான் கூறிவருகிறது.

ஆனாலும் பாகிஸ்தானில் இருந்துகொண்டு, இந்தியாவில் இருப்பவர்களிடம் மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற வேலைகளைத் தன்னுடைய அடியாட்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார் தாவூத் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில்கூட தாவூத்தின் உறவினர்கள் தங்கியிருக்கும் டோங்கிரி பகுதியில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது. இதில் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான சோட்டாசகீல் உறவினர் உட்பட சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் நாக்பூர் அலுவலகத்துக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், தாவூத் இப்ராஹிம் பெயரைச் சொல்லி மிரட்டி ரூ.100 கோடி பணம் கேட்டிருக்கிறார்.

தாவூத் இப்ராஹிம்

ஒரே நாளில் மூன்று முறை தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டியதாக நிதின் கட்கரி தரப்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. போலீஸ் உயரதிகாரிகள் நிதின் கட்கரியின் இல்லத்துக்குச் சென்று இது குறித்து விசாரணை நடத்தினர். தற்போது நிதின் கட்கரி நாக்பூரில் இருக்கிறார். நிதின் கட்கரி நாக்பூரில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் யாராவது இப்படி மிரட்டல் விடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவிலிருந்து போனில் மிரட்டல் வந்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து நிதின் கட்கரிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.