'துணிவு, வாரிசு' – ரூ.100 கோடி வசூல் என சொல்லப் போவது யார்?

விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' இரண்டு படங்களும் வெளிவந்து இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு படங்களுமே தமிழகத்தைப் பொறுத்தவரையில் நன்றாகவே ஓடி வருகிறது. மற்ற மாநிலங்களில் 'துணிவு' படத்தை விடவும் 'வாரிசு' படம்தான் அதிக வசூலைத் தருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அது போலவே வெளிநாட்டு வசூலிலும் 'வாரிசு' தான் முன்னிலை வகிக்கிறது என்கிறார்கள்.

ஆனால், இதுவரையிலும் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் 100 கோடி வசூலைக் கடந்ததா இல்லையா என்பது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. 'ரியல் வின்னர்', 'பிளாக்பஸ்டர் ஹிட்' என்று மட்டும் இரண்டு படங்களைப் பற்றியும் மாறி மாறி டிரெண்டிங் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் டுவிட்டர் டிராக்கர்கள் என சொல்லப்படும் சிலரிடம் சில பல லட்சங்களைச் செலவு செய்து ஏட்டிக்குப் போட்டியாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருகிறார்களாம்.

ஐந்து நாள் வசூலில் இந்நேரம் ஒரு படமாவது 100 கோடி வசூலைக் கடந்திருக்கும். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்கள் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை. இன்று 'வாரிசு' படக்குழுவினர் இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் 'நன்றி சந்திப்பு' நிகழ்வு ஒன்றை பத்திரிகையாளர்கள் முன் நடத்த உள்ளனர். அப்போது 'வாரிசு' வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.