முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள்: மனங்களை விட்டு விலகாத ‘மக்கள் திலகம்’

தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். எனினும், மக்களின் ஏகோபித்த அன்பையும், பாசத்தையும், நன்மதிப்பையும் பெற்றவர்களின் பட்டியலில் கண்டிப்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமசந்திரனுக்கு முக்கிய இடம் உள்ளது. சினிமா மூலம் பொது வாழ்க்கையில் நுழைந்து தமிழக மக்களின் உணர்வோடும், வாழ்வோடும் பின்னிபிணைந்தவர் அவர். மக்களின் ஆசைக்குரிய நடிகரும் அபிமான அரசியல்வாதியுமான முன்னாள் முதல்வர் எம்.ஜி ராமச்சந்திரனின் பிறந்தநாள் இன்று. அவர் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி பிறந்தார்.

மக்கள் திலகம் என அனைவராலும் பாசத்தோடு அழைக்கப்படும் எம்ஜிஆர் 1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். மக்களின் இதயக்கனியாகவே அவர் வாழ்ந்தார். அரசியலில் இருந்தாலும், மக்களிடம் காட்டும் அன்பில் என்றும் அவர் குறை வைத்ததில்லை. அவர்களது துயரத்தை தன் துயரமாய் எண்ணி அதை தீர்க்க பல நடவடிக்கைகளை எடுத்தார். எதை செய்தால், வெகுஜன மக்கள் பயனடைவார்கள் என சிந்தித்து செயல்பட்டார். அதற்கான பலனாக, தமிழ்நாடு பல நத்திட்டங்களைக் கண்டது. மக்களின் மனங்களில் அவர் சிம்மாசமனிட்டு அமர்ந்தார். 

இன்று எம்ஜிஆர்-ன் 106 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. சொல்லப்போனால், அவரது அனைத்து படங்களும் மக்களை கவர்ந்த படங்கள்தான். அனைத்திலும் சமுதாயத்திற்கான செய்தி கண்டிப்பாக இருக்கும். அவற்றில் சில படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சதி லீலாவதி (முதல் படம்-1936)

எஸ்.எஸ்.வாசனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட எல்லிஸ் ஆர் டங்கனின் திரைப்படத்தில் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.வி.மணி மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கதைக்களம் மெட்ராஸைச் சேர்ந்த ஒருவரைச் சுற்றி இருக்கும். அவர் தனது நண்பரின் காரணமாக குடி பழக்கத்துக்கு அடிமையாகிறார். அதன் பின் அவர் வாழ்வில் நடக்கும் சம்பங்களின் கதையாகும் இது. இதில், ஒரு ஊழல் போலீஸ் அதிகாரியின் பாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்தார்.

மலைக்கள்வன் (1954)

எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் பி. பானுமதி நடித்து, 1954 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மலைக்கள்வன். இப்படம் 22 ஜூலை 1954 இல் வெளியிடப்பட்டது. மேலும் அந்த ஆண்டில் அபாரமான வெற்றியை பெற்றது. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் 140 நாட்களுக்கு மேல் ஓடியது. ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமும் இதுவே. 

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)

வாள் சண்டை மற்றும் வீர சாகசங்களால் வகைப்படுத்தப்பட்ட ஒரு அதிரடியான திரைப்படமாக இது வெளிவந்தது. இந்த டி.ஆர்.சுந்தரம் படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பானுமதி ராமகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். அலிபாபா என்ற ஏழை விறகுவெட்டியின் கதையை ஒட்டி இப்படம் இருந்தது. இது முதல் தென்னிந்திய முழு நீள வண்ணத் திரைப்படமாகும்.

எங்க வீட்டுப் பிள்ளை (1965)

இப்படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இது 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான ராமுடு பீமுடுவின் ரீமேக்காகும். இப்படம் எம்ஜிஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.  

ரிக்ஷாக்காரன் (1971)

எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்த இந்தப் படத்தை எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கியிருந்தார். மற்றொரு ரிக்ஷாக்காரனைக் கொன்றதைக் கண்ட ரிக்ஷாக்காரன் செல்வம் வேடத்தில் எம்ஜிஆர் இப்படத்தில் நடித்திருப்பார். இப்படம் வெளியான நேரத்தில் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

அன்பே வா (1966 )

ஏ.சி.திருலோக்சந்தர் எழுதி இயக்கிய காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும் இது. இப்படத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் பி.சரோஜாதேவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஏ.அசோகன், நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், பி.டி.சம்பந்தம், மனோரமா மற்றும் டி.பி.முத்துலட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 1961 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான கம் செப்டம்பரை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. 

உலகம் சுற்றும் வாலிபன் (1973)

உலகம் சுற்றம் வாலிபன்1973 ஆம் ஆண்டு வெளிவந்த மிக பிரம்மாணடமான படம். இப்படத்தை எம்ஜிஆர் இயக்கியும் இணைந்து தயாரித்தும் இருந்தார். இப்படத்தில் எம்ஜி ராமச்சந்திரன், சந்திரகலா, மஞ்சுளா, லதா ஆகியோர் நடித்துள்ளனர். இது ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையை சுற்றி எடுக்கப்பட்ட மிக அழகான படமாக அமைந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.