இந்த பக்கம் மூக்கை நீட்டாதீங்க ப்ளீஸ்: சசிகலாவுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் போக்கு முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்பது தெரியாமல் உள்ள நிலையில் இரு தரப்புமே நகத்தைக் கடித்துக் கொண்டு தீர்ப்பை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க சசிகலாவோ அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என்ற பழைய பாடலை ராகம் மாறாமல் பாடி வருகிறார். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தனது இல்லத்தில் அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த
சசிகலா
, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்தி, அதை எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் திட்டம் உள்ளது” என்று அவர் கூறினார்.

சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். “சசிகலா ஆயிரம் கருத்துகள் சொல்லலாம். ஆனால் அதெல்லாம் யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. அவர் எவ்வளவோ கருத்துகளைக் கூறினார், அதிமுகவைப் பொறுத்தவரை அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

அதிமுக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாகவும் எழுச்சியாகவும் இருக்கின்ற நிலையில், சசிகலா யார் இதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு? தனிப்பட்ட முறையில் அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும்.

அவர் என்ன செய்யலாம் என்றால்,
ஓபிஎஸ்
, டிடிவி மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றிணைந்து தனிக்கட்சி ஆரம்பித்தால் நல்ல விஷயம்தான். அதற்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். இது ஜனநாயக நாடு, கட்சி ஆரம்பித்துக் கொள்ளுங்கள், கொள்கைகளை பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

அதிமுகவில் மூக்கை நுழைக்காதீர்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒருமித்தக் கருத்தோடு இருக்கும்போது, சசிகலா கூறியிருப்பதை தேவையில்லை என்றுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கருதுவான்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.