திருவள்ளூர் மாவட்டம் தங்கனூரில் களைகட்டிய சேவல் சண்டைபோட்டி: முதல் பரிசாக விலை உயர்ந்த இருசக்கர வாகனம் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தங்கனூரில் உயர்நீதிமன்ற விதிகளை பின்பற்றி சேவல் சண்டை போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூரில் ஆண்டுதோறும் சேவல் சண்டை போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் தங்கனூரில் பிரசித்தி பெற்ற இப்போட்டி இன்று தொடங்கியிருக்கிறது. இதில் உள்ளூர் மட்டுமில்லாது கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து 2000-க்கும் அதிகமான சேவல்கள் கலந்து கொண்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளை பின்பற்றி போட்டிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர். சேவல்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டுள்ளதா, கால்களில் கூர்மையான ஆயுதம் கட்டப்பட்டுள்ளதா என்பதை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், தகுதி பெற்ற சேவல்கள் ஜோடி ஜோடியாக களம்கண்டு வருகின்றன. சேவல் சண்டைக்கென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 70 களங்களை அமைத்திருக்கின்றன. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற சேவல்களுக்கு ஒரு கிராம் வெள்ளி நாணயம், உரிமையாளர் பெயர் எழுதிய சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. டிராவில் முடியும் போட்டிகளில் சேவல் உரிமையாளர்களுக்கு குக்கர் பரிசாக அளிக்கப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் களத்தில் அதிகநேரம் தாக்குப்பிடிக்கும் சேவல்களின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக விலை உயர்ந்த இருசக்கர வாகனம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் இடம் பிடிக்கும் சேவல் உரிமையாளருக்கு ஸ்கூட்டி பரிசளிக்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.