சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று (ஜன.23) நடந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக வரும் ஜன.25-ம் தேதி அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா மற்றும் ஆர்.தங்கவேலு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 23.01.23 அன்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 25.01.23 (புதன்கிழமை) அன்று காலை 11.30 மணிக்கு தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நமது தலைமை அலுவலகத்தில் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கட்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர், “எனக்கு அவர் ஆதரவு தரவேண்டும் என்று கோரினேன். கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக கமல்ஹாசன் சொன்னார்” என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். இதேபோல், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்த விஷயத்தில் லாபத்தைப் பற்றி நினைக்காமல் மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்” என்று கமல்ஹாசன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.