75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை ,விசேட போக்குவரத்து ஏற்பாடு

75வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு நாளை (பெப்ரவரி 4 ஆம் திகதி) கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் (போக்குவரத்து) ரொஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

நாளை 04 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வீதிகள் மூடப்படுவது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய, காலி வீதி, பம்பலப்பிட்டி, பாலதக்க்ஷ மாவத்தை சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையிலான பகுதி, இன்று காலை 9.30 மணி முதல்  ஒத்திகைக்காக மூடப்பட்டு மதியம் 12.30 மணியளவில் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வைபவம் நடைபெறவுள்ள நாளை (4ஆம் திகதி) அதிகாலை 5.00 மணி தொடக்கம் சுதந்திர தின வைபவ நிகழ்வுகள் முடிவடையும் வரை பம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து மெரின் டிரைவ் வரையான வீதி மூடப்படும். பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் வீதிப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
இப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் விசேட தேவைகளுக்காக, விமான நிலையம் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லவேண்டியுள்ளவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுதந்திர தின வைபவம் இடம்பெறும் காலத்தில், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்புவழங்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அடையாளம் காணல் மற்றும் சோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.