கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி அருகே மேசகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மகள் மல்லிகா. இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் அடிக்கடி பொருட்கள் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், மல்லிகாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீங்கள் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் குலுக்கல் மூலம் உங்களுக்கு ரூ.12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளது.
இருப்பினும், அந்த பரிசை வாங்குவதற்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளுக்காக ரூ.5.22 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மல்லிகா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு போன் பே மூலம் ரூ.5.22 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், அவருக்கு வந்த கடிதத்தில் தெரிவித்திருந்தது போல் எந்த பரிசும் வரவில்லை. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.