சென்னை: ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்குவாரா என்று பார்க்கலாம் என சவால் விடுகிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார்மனு அளித்த பின்செய்தியாளரை சந்தித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி, டெபாசிட் கூட வாங்க முடியாவிட்டால், கட்சியை ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்துவிட்டு, அவரது காலில் விழுந்து வழங்க வேண்டும்
ஈரோடு கிழக்கு தொகுதி பற்றி சிறுவயதில் இருந்தே தனக்குத் தெரியும் என்று கூறிய புகழேந்தி, இரட்டை இலைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று அஞ்சுவதாக கவலைப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்த பேட்டி இது..
சமூக வலைதளத்தில் என்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு மிரட்டல் கால் அதிகமாக வருகிறது இறுதியில் புகழேந்தி இறந்து விட்டார் என செய்தியை பரப்ப தொடங்கியுள்ளனர். தகுந்த ஆதரங்களை டிஜிபி அலுவலகத்தில் வழங்கியுள்ளேன். ஆதாரத்துடன் கொடுத்திருப்பதால் 24 மணி நேரத்தில் கைதாவர்கள் என நம்புகிறேன் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி இப்படி நடந்து கொள்வார் என நினைத்து பார்க்கவில்லை. இபிஎஸ் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸை கண்டவாறு திட்டி பதிவு போடுகின்றனர் என்று கூறிய புகழேந்தி, தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினோம், தமிழ் மகன் உசேன் ஒரு சார்பாக நடந்து கொண்டார், அதனால் வேட்பாளரை திரும்ப பெற்றோம் என்று விளக்கம் அளித்தார்.
இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னைப் பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவதூறாக கருத்துகளை வெளியிட்டு தேவையில்லாத வேலையை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்குவாரா என்று பார்க்கலாம் என சவால் விட்டார்.
பாஜக மீது மரியாதை வைத்திருக்கிறோம். அதற்காக அண்ணாமலை சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது என்று கூறிய புகழேந்தி, அண்ணாமலையை கர்நாடகாவிலிருந்து பார்த்து வருகிறேன், அவரை விட எனக்கு அனுபவம் உண்டு என தெரிவித்தார்.
புறா கூடு தலைவன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த புகழேந்தி, அவரைக் கண்டால் பெண்களெல்லாம் பயந்து ஓடுவதாக தெரிவித்தார். அவர் சிந்துவிடம் பேசிய உரையாடல் எல்லாம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் ஈரோடு கிழக்கு தொகுதி எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும் என்று கூறி, ஈரோட்டில் உள்ள திரையரங்குகளின் பெயர்களை பட்டியலிட்ட அவர் அந்த தொகுதிகளின் வீதிகளில் இறங்கி அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்