100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முத்தரசன் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு கடந்த ஆண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏழைகளுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்துக்கான நிதி பட்ஜெட்டில் ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் சிறுபான்மையினர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டு தமது அரசு ஏழைகளுக்கான அரசு என பிரதமர் நரேந்திர மோடி கூச்சமின்றி பேசுகிறார் என தெரிவித்தார். அதானி, அம்பானியை பாதுகாக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளதாக குற்றம்சாட்டிய முத்தரசன், 22 சதவீதம் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.