தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே 8 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் மனம் உடைந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொம்மிடியை அடுத்த பி.பள்ளிப்பட்டியை சேர்ந்த அருண் பிரசாத் என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் மதியம் உணவு இடைவேளையின் பொழுது வீடு திரும்பிய அருண் பிரசாத் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருண் பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அருண் பிரசாத் வீட்டில் சோதனை செய்தபோது அவர் கைப்பட எழுதிய 12 பக்கங்கள் கொண்ட கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் தனக்கு வீட்டு மனை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த நாமக்காரர் எனும் சிவசங்கர் தனது மரணத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது வீட்டிற்கு அருகில் இருந்த மற்றொரு இடத்தை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்திய சிவசங்கர் ரூபாய் 8 லட்சத்தை வாங்கிக் கொண்டு இடத்தை எழுதிக் கொடுக்காமல் மிரட்டி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை செய்து கொண்டு கொண்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சிவசங்கர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.