“ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்போதெல்லாம் திமுக-வுக்கு மூக்கு வியர்க்கும்!" – அண்ணாமலை

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டுவந்த புதிய மதுபானக்கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பா.ஜ.க குற்றம்சாட்டிவந்ததையடுத்து, விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரைக் கைதுசெய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுகூட, இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `தி.மு.க-வுக்கு ஏன் இந்தப் பதற்றம்’ என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்,

அண்ணாமலை

அதில், “டெல்லியில்‌ ஆம்‌ ஆத்மி அரசு, நவம்பர்‌ 21, 2021-ம்‌ ஆண்டு கொண்டுவந்த புதிய மதுபானக்‌கொள்கை முறைகேடுகள்‌ காரணமாக, டெல்லி துணை முதலமைச்சர்‌ மணீஷ்‌ சிசோடியா, சி.பி.ஜ-யால்‌ கைதுசெய்யப்பட்டிருக்கிறார். டெல்லியில்‌ ஆம்‌ ஆத்மி கட்சி ஆட்சிப்‌ பொறுப்புக்கு வந்த பிறகு, 2021-ம்‌ ஆண்டு நவம்பரில்‌ புதிய மதுபானக்‌கொள்கையை அறிமுகம்‌ செய்தது. இதனடிப்படையில்‌ 800-க்கும்‌ மேற்பட்ட தனியார்‌ நிறுவனங்களுக்கு மதுபானம்‌ விற்க உரிமம்‌ வழங்கப்பட்டது.

இந்த நிலையில்‌, டெல்லி அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ நரேஷ்‌ குமார்‌ ஐ.ஏ.எஸ்‌, புதிய மதுபானக்‌கொள்கை குறித்து, டெல்லி முதலமைச்சர்‌ அரவிந்த்‌ கெஜ்ரிவால்‌, டெல்லி நகர மேயர்‌, டெல்லி துணைநிலை ஆளுநர்‌ ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்‌. இந்த அறிக்கையை மையமாக வைத்து, புதிய மதுபானக்‌கொள்கையைப்‌ பற்றி விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத்‌ துறைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர்‌ ஆணையிட்டார்‌. மதுபான சில்லறை விற்பனை உரிமம்‌ பெற்றவர்கள்‌, டெல்லி கலால்‌ விதிகள்‌ 2010-ஐ மீறி பல்வேறு வழிகளில்‌ மதுபான விளம்பரம்‌ செய்திருக்கின்றனர்.

அண்ணாமலை அறிக்கை

இந்த விதிமீறலுக்கு அபராத நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. வெளிநாட்டு மதுபானங்களின்‌ விலையை மாற்றியமைத்தும்‌, இறக்குமதி அனுமதி கட்டணத்தை நீக்கியதன்‌ மூலமாகவும், மதுபான உரிமதாரர்களுக்குத் தேவையற்ற சலுகைகள்‌ வழங்கப்பட்டன. இதனால்‌ அரசுக்கு வருவாய்‌ இழப்பு ஏற்பட்டது. புதிய மதுபானக்‌ கொள்கையானது, மதுக்‌ கடைகளின்‌ விடுமுறை நாள்களின்‌ எண்ணிக்கையை, அமைச்சரவை ஒப்புதல்‌ பெறாமலும்‌, துணைநிலை ஆளுநர்‌ கருத்தைக்‌ கேட்காமலும்‌ 21-லிருந்து மூன்றாகக்‌ குறைத்தது. மதுபான சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள்‌, அவர்கள்‌ பலன்‌ பெறும்‌ வகையில்‌, வழங்கப்பட்ட கால அளவைவிட கூடுதல்‌ நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

கட்டணம்‌ வசூலிக்காமல், உரிமக்‌ காலத்தை நீட்டித்ததால்‌, அரசுக்கு வருவாய்‌ இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாது, கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம்‌ காட்டி, ஜனவரி 2022-ல்‌ ரூ.144.36 கோடி மதிப்பிலான மது விற்பனை உரிமக்‌ கட்டணங்கள்‌ தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மணீஷ்‌ சிசோடியா, விதிமுறைகளை மீறி, பல தனியார்‌ நிறுவனங்களுக்கு மது விற்பனை உரிமங்களைக்‌ கொடுத்தாகவும்‌, அதன்‌ பிரதிபலனாக, கோவா, பஞ்சாப்‌ மாநிலங்களின் தேர்தல்‌ செலவுக்கு, பல நூறு கோடி ரூபாய் அந்தத்‌ தனியார்‌ நிறுவங்களிடமிருந்து ஆம்‌ ஆத்மி கட்சி பெற்றதாகவும்‌, அரசுக்கு சுமார்‌ 2,800 கோடி ரூபாய்‌ அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கும்‌ என்றும்‌, தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையை அடிப்படையாகக்‌ கொண்டு, சி.பி.ஐ வழக்கு தொடர்ந்து விசாரணையைத்‌ தொடங்கியது.

கெஜ்ரிவாலுடன் சிசோடியா

விசாரணையில்‌ கிடைத்த பல்வேறு ஆதாரங்களின்‌ அடிப்படையில்‌, டெல்லி துணை முதலமைச்சர்‌ மணீஷ்‌ சிசோடியா உள்ளிட்ட 15 பேர்‌மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து, அவர்‌ உள்ளிட்ட பலரின் விடுகளில்‌ சோதனை நடத்தப்பட்டது. ஒன்பது தொழிலதிபர்கள்‌, இரண்டு மதுபான ஆலைகள்‌மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து விசாரித்து, ஒன்பது பேரைக்‌ கைதுசெய்தது. அவர்களிடம்‌ நடத்தப்பட்ட விசாரணையின்‌ அடிப்படையில்‌, இரண்டு குற்றப்பத்திரிகைகள்‌ தாக்கல்‌ செய்யப்பட்டன. இந்தக் குற்றப்‌பத்திரிகைகளில்‌ புதிய மதுபானக்கொள்கை முறைகேட்டில்‌ ஆம்‌ ஆத்மி மூத்த தலைவர்கள்‌ மற்றும்‌ தெலங்கானா முதல்வர்‌ சந்திரசேகர ராவின் மகளும்‌, தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவுக்குத் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ அதிகாரிகள்‌ சம்மன்‌ அனுப்பி விசாரணை நடத்திவருகின்றனர்‌.

கடந்த 23-ம்‌ தேதி கெஜ்ரிவாலின்‌ உதவியாளர்‌ பிபவ்‌ குமாரிடமும்‌ சி.பி.ஐ அதிகாரிகள்‌ விசாரணை மேற்கொண்டனர்‌. இந்த நிலையில்‌தான்‌, மணீஷ்‌ சிசோடியாவை சி.பி.ஐ 8 மணி நேர விசாரணைக்குப்‌ பிறகு கைதுசெய்திருக்கிறது. இது தொடர்பாக சி.பி.ஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில்‌, `மணீஷ்‌ சிசோடியா காலை 11 மணிக்கு சி.பி.ஐ தலைமை அலுவலகத்துக்கு வந்தார்‌. அவரிடம்‌ 8 மணி நேரம்‌ விசாரணை நடத்தப்பட்டது. மணீஷ்‌ சிசோடியா அளித்த பதில்‌ திருப்திகரமாக இல்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவும்‌ இல்லை. ஆதாரங்களைக்‌ காட்டி கேள்வி எழுப்பப்பட்டபோதும்‌, மழுப்பலான பதில்களை அளிப்பதால்‌, காவலில்‌ எடுத்து விசாரிப்பது அவசியம்‌’ என்று தெரிவித்திருக்கிறது. இது விசாரணை அமைப்புகளின்‌ பொதுவான நடைமுறையே.

டி.ஆர்.பாலு

டெல்லி அரசின்‌ புதிய மதுபானக்‌கொள்கையில்‌ இத்தனை முறைகேடுகள்‌ நடந்திருக்க, மணீஷ்‌ சிசோடியா கைதை, ஜனநாயக விரோதம்‌, சட்ட விரோதம்‌ என்று விமர்சித்திருக்கிறார்‌ தி.மு.க எம்.பி டி.ஆர்‌.பாலு. எப்போதெல்லாம்‌ நம்‌ நாட்டில்‌ ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படுகிறதோ, உடனடியாக, தி.மு.க-வினருக்கு, அவர்கள்‌ கட்சியின்‌ தலைவர்கள்‌, அமைச்சர்கள்‌, வாரிசுகள்‌ மேல்‌ இருக்கும்‌ ஊழல்‌ வழக்குகளும்‌, அமலாக்கத்துறை வழக்குகளும்‌ ஞாபகத்துக்கு வந்து, மூக்கு வியர்க்கும்‌. மடியில்‌ கனம்‌ இருந்தால்‌ வழியில்‌ பயம்‌ இருப்பதில்‌ ஆச்சர்யம்‌ ஒன்றும்‌ இல்லையே. தி.மு.க அமைச்சர்களும்‌, எம்.பி-க்களும்‌ அமலாக்கத்‌துறை விசாரணைக்குப்‌ போய்‌ வந்துகொண்டிருப்பது, பொதுமக்களுக்கு வேண்டுமானால்‌ தெரியாமல்‌ இருக்கலாம்‌. டி.ஆர்‌.பாலுவுக்குத்‌ தெரியாமல்‌ இருக்குமா?

நாளை அவரது கட்சியிலும்‌ யாராவது கைதாகும்‌ நிலை வந்தால்‌, மற்ற கட்சிகளின்‌ ஆதரவு வேண்டுமே என்று பெயருக்கு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்‌. தி.மு.க அரசையோ, முதலமைச்சரையோ சமூக வலைதளங்களில்‌ விமர்சித்தாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும்‌ தி.மு.க-வுக்கு, ஜனநாயகத்தைப்‌ பற்றி எல்லாம்‌ பேசத்‌ தகுதி இருக்கிறதா… ஆட்சிக்கு வந்ததும்‌, முந்தைய அ.தி.மு.க அரசின்‌ அமைச்சர்கள்‌ மேல்‌ லஞ்சஒழிப்புத்‌ துறையை ஏவிவிட்டதெல்லாம்‌ மக்கள்‌ மறந்துவிடவில்லை.

பிரதமர் மோடி

பிரதமர்‌ நரேந்திர மோடி ஆட்சியில்‌, விசாரணை அமைப்புகள்‌, சுதந்திரமாகவும்‌, முழு அதிகாரத்துடனும்‌ செயல்பட்டு வருகின்றன. குற்றம்‌ செய்தவர்கள்‌, நீதிமன்றத்தில்‌ தகுந்த ஆதாரங்களுடன்‌ குற்றம்‌ நிரூபிக்கப்பட்டு அதற்கான தண்டனை பெறுவதை நாம்‌ பார்த்துக்‌கொண்டிருக்கிறோம்‌. அது தொடரும்‌” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.